கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 50,000 வீதம் விசிக சார்பில் நிதி உதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, விசிக திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன்,மேலிட பொறுப்பாளர் வேலுசாமி, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு தமிழக அரசு விரைந்து மருத்துவ உதவி செய்து கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரண உதவி வழங்கி துரிதமாக செயல்பட்டது குறிப்பாக தமிழக முதல்வர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டார் என்பதை நாடறியும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், நீதிபதி தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு விசாரணை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் எந்த தலையீடும் இல்லை. நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.










